29 August 2011

ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !

 அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்......


புனித  ரமலான்  முழுவதும்  பகல்  பொழுதில்  நோன்பிருந்து, இறுதி  நோன்பை  முடித்து, அதற்கடுத்த  தினம்  ஈகைப்  பெருநாளை  கொண்டாடி  மகிழ்கிறோம். பத்தாடை  அணிந்து, நறுமணம்  பூசி,சுவையான  உணவுகளை  உண்டு  கழிக்கிறோம். அல்லாஹ்வுக்கு  நன்றி  கூறுகிறோம். இவ்வாறு  மகிழ்வுடன்  இருக்கும் போது நம்  கண்ணெதிரில், நம்  பக்கத்து  வீட்டில்,அடுத்த  தெருவில் நம்மைச்  சுற்றி  எத்தனையோ  ஏழைகள்-சகோதர,சகோதரிகள் நம்மைப் போன்றே  நோன்பு  நோற்று  விட்டு பெருநாளை  மகிழ்ச்சியுடன்  கொண்டாட முடியாமல்  வாடிக்  கொண்டிருப்பார்கள். இந்நிலை ஏற்படாமல் வசதி  படைத்தவர்களைப்  போன்றே எல்லாமக்களும்  மனங்குளிர  உணவருந்த வேண்டும்  என்பதற்காக  இறைவனால்  வழங்கப்பட்ட  திட்டம்  தான்  பித்ரா  எனும்  பெருநாள்  தர்மம்  ஆகும்.


முஸ்லிமான  ஆண்,பெண்,சிறியவர்,பெரியவர்,பணியாட்கள் அனைவருக்காகவும் பெருநாள் தர்மத்தை  நபி {ஸல்} கடமையாக்கினார்கள்  என்று  இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}

உணவு பொருட்களாகவோ,பணமாகவோ  பித்ராவை  வழங்கலாம்.
பெருநாளைக்கு  சில  தினங்கள்  முன்பாகவே  இதனை  வழங்குதல்  சிறப்பாகும் நபித்  தோழர்கள்  பித்ராவை பெருநாளைக்கு சில நாட்கள்  முன்பாகவே  கொடுத்து  வந்தனர் என்று இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}


பெருநாள் தொழுகைக்கு  முன்னரே பித்ராவை கொடுத்துவிடுமாறு  நபி{ஸல் அவர்கள்  கூறியதை,இன்றைய  மக்கள்  பெருனாளன்று  காலையில்  ஏழைகளைத்  தேடுமளவு  ஆக்கி  கொண்டார்கள்.


பித்ரா தரமானதாகவும்  பிறர்  உண்ணும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஒருவர்  மட்டகரமான  பேரிச்சம்பழத்தை  கொண்டு வந்தார். அதை நபியவர்கள்  பெற்று கொள்ளாமல்,  அதை கணக்கில் எடுத்து  கொள்ள வேண்டாம்  என்று  தடுத்து  விட்டார்கள். இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}

  
நபித்தோழர்கள் காலத்தில்  இருகைகளால்  உணவு பொருகளைப் வாரி வழங்கி  அதனை  ஒரு  ஸாவு என கண்கிட்டார்கள்.

இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.
இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க வேண்டும்.



பித்ரா  நோக்கத்தையும், அதன்  சுன்னத்தான  முறையையும்  நாம் உணர்ந்து, ஏழை  முஸ்லீம்களையும் சந்தோஷமாக  பெருநாள்  கொண்டாட  வகை  செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....

                                                                

                                                                
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ் ...                                                              

                அனைவருக்கும்  ஈத்  பெருநாள்  நல் வாழ்த்துக்கள்.  


                                                              உங்கள் சகோதரி 
                                                               ஆயிஷா  அபுல் .


புனித ரமலான் மாதமும் நம்மை கடந்து செல்கிறது. பிரிய மனமின்றி ஏக்கத்துடன் விடை கொடுப்போம்.எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
 

19 August 2011

புனிதமான இரவு {லைலத்துல் கத்ர்}

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு
                                      
                                    
                                                                        
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)        

1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். 


4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின்      கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். 

5. சாந்தி (நிலவியிருக்கும்),; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். 

                         
லைலத்துல் கத்ரின் சிறப்புகள் இங்கே  படிக்கவும்.

11 August 2011

புனித ரமளானில் நாம் !

                                                                              
                                                                        

அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு 


உலகத்தையே  படைத்தாளும்  வல்ல  இறைவனாகிய   அல்லாஹ்  இந்த 
ரமலானையும்   நமக்கு  வழங்கி  கருணை புரிந்திருக்கிறான்.முதலாவதாக 
இறைவனிடத்திலிருந்து   ஓர்  அருட்கொடை  வழங்கப்பட்டால்  உடனே நாம் இறைவனுக்கு   நன்றி  செலுத்திட  வேண்டும். அருட்கொடைகளில்   சிறந்த 
ரமலானை  வழங்கியதற்காகவும்  அல்லாஹ்வுக்கு   அதிகமாக  நன்றி செலுத்த  வேண்டும்.

 
இறுதி   தூதரான   முகம்மத்  {ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்}
அவர்கள்   ரமலான்  மாதம்   வந்ததும்  தோழர்களிடம்  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி  நற்ச்செய்தியை  கூறுகிறார்கள் ......
இம்மாதத்தில்  அல்லாஹ்   உங்கள்  மீது  நோன்பை   கடமையாக்கி  உள்ளான். சொர்கத்தின்  கதவுகளை  உங்களுக்குகாக  திறந்து  வைக்கிறான்.
நரகத்தை   சாத்தி  வைக்கிறான்.


மக்கள்   அனைவரும்  உலக  விசயங்களில்  செயல்  பட  துல்லியமாக        திட்ட  மிடுகிறார்கள்.  ஆனால்  மறுமை   வாழ்வுக்காக  எந்த  திட்டமிடுதலும் இல்லாமல்   அலட்சியமாக   உள்ளனர். உண்மையான  நிரந்தமான வாழ்க்கை  எது  என்பது  பற்றி  இறை  நம்பிக்கையாளர்கள்  நன்றாக அறிந்திருக்க  வேண்டும்.  அதற்காக  இந்த  ரமலானைக்  கொண்டும்  முடிந்த அளவு   மறுமை  பயன்களை  அடைந்திட  திட்டமிட  வேண்டும்.  



தன்  மனதை  கட்டுப்படுத்தி  மறுமை  வாழ்வுக்காக  திட்டமிட்டு  செயல்படுபவன்  தான்  புத்திசாலி  என்று  நபி  {ஸல்} அவர்கள்  கூறுகிறார்கள்.இவ்வகையில்  மனதோடு  போராடும்  தன்மையை  வளர்த்து அல்லாஹ்வுக்கும்,  அவனுடைய  தூதருக்கும்  முற்றிலும்  அடிபணியக்  கூடிய பண்பை  வழங்குகிறது புனித  ரமலான் .  இந்த  பயிற்சியை  ரமலான்  நமக்கு வழங்குவதால்  தான்  நபி  {ஸல்}  அவர்கள்  மிகுந்த  முக்கியத்துவம்  அளித்து,சத்திய   தோழர்களையும்  உற்சாகமூட்டியுள்ளார்கள்.


நோன்புக்கு  நானே  கூலியாவேன்  என்று  வாக்குறுதி  அளித்துள்ள  அல்லாஹ்  அதற்கு  சில  நிபந்தனைகளையும்   விதிக்கிறான். செயல்களின் 
தரத்தைப்  பொறுத்து  எண்ணத்  தூய்மையை  பொறுத்து  ஒவ்வொரு 
நற்செயலுக்கும்  பத்து  முதல்  எழுநூறு  மடங்குவரை  நன்மைகளை  வழங்குகின்ற  அல்லாஹ்,  நோன்பாளி  தன்  பசியையும்,  இச்சையும், தாகத்தையும்  தனக்காகவே  பொறுத்துக்  கொள்கிறான்  என்பதால்  அதற்கான கூலியை   தானே  வழங்குவதாக--நானே கூலியாக  ஆகி  விடுவதாக  கூறுகிறான். அந்த  பெரும்  நல்வாய்ப்பை  பெற  வேண்டுமென்றால்  அதற்கு சில  தகுதிகளை  விதிகின்றான்.
                      
                                                                              

இதை  அல்லாஹ்வுடைய  தூதர்{ஸல்}அவர்கள்  தெளிவு  படுத்துகிறார்கள்.

பொய்  பேசுவதை  விட்டும், பொய்யான  காரியங்களை  விட்டும்  விலகி 
விடாமல், அவர்கள்  பட்டினி  கிடப்பதாலும்  தாகத்துடன்  இருப்பதாலும் 
இறைவனுக்கு  எந்தத்  தேவையுமில்லை .{அஹ்மத்  புகாரி }

சாப்பிடாமல்,  குடிக்காமல்  இருப்பதெல்லாம்  நோன்பாகாது . வீணான 
ஆபாசமான  செயல்களை  விட்டும்  விலகி   இருப்பதுதான்  நோன்பாகும் .

மேலும்  இறைவழியில்  செலவழிப்பது , வாரி  வழங்குவது,  அன்பையும், 
ஆதரவையும்   வெளிப்படுத்துவது, ஆதரவற்றவர்களை  ஆதரிப்பது,         தேவையுடையவர்களை   தேடிச்சென்று  உதவுவது  முதலான   சமூக  சேவைகளை  ரமலான்  நமக்கு  பயிற்சியளிக்கிறது .

ஆதரவற்றவர்களுக்காகவும்,  வறியவர்களுக்காகவும்  பாடுபடுபவன்  இறைவழியில்  போராடும்  வீரத்  தியாகியைப்  போன்றவன்  அல்லது 
இரவு  முழுக்க  நின்று  தொழுது,  பகல்  முழுக்க நோன்பிருந்தவனைப்  
போன்றவன்  என்று   நபி {ஸல்}  அவர்கள்  கூறுகிறார்கள் .{புகாரி  முஸ்லிம்}



நபியவர்களின்   மேற்கண்ட  உயர்ந்த  நற்செயல்களில்  ஈடுபட்டு,  நாம் 
நிறைவான  நோன்பை  வைத்து,  நம்முடைய  மனதின்  கடிவாளத்தை முழுக்க  முழுக்க நம்  பிடிக்குள்  கொண்டு  வந்து  விட்டால், பிறகு  நாம் சொல்வதைத்தான்  நம்  மனம்  கேட்கும். அதாவது  நம்  மனம்  நமக்கு  அடிமைப்பட்டுவிடும்.  இந்த  மிக உயர்ந்த  பயிற்சியைத்தான்  ரமளானின் 
நோன்பு  நமக்கு  அளிக்கிறது.



நீங்கள்  நோன்புற்றவராக  இருந்தால், உங்களுடைய  காதுகளும்,
கண்களும்  நோன்பிருக்க  வேண்டும்.  அதே  சமயம்  உள்ளத்தில்  நீ  அமைதியையும், நிம்மதியையும்  உணர  வேண்டும். நோன்பிருக்கிற  நாளும்,  மற்ற  நாட்களும்  ஒன்று  போல  இருக்கக்கூடாது. 



நோன்பாளிகள்  இவற்றைக்   கவனித்து,  ஆபாசமான  தொல்லைக்   காட்சிகள், சச்சரவுகளை  பரப்புகின்ற  சஹர்  நேர  சானல்கள்,அனைத்து  விதமான  வீணான  செயல்களை  விட்டும்  நீங்கி, அல்லாஹ்வின்  மீது  மட்டும்  பற்றும்,  பாசமும்  வைத்து  அல்லாஹ்வின்  நெருக்கத்தை   நோக்கி  மென்மேலும்  முன்னேறுகின்ற  நோன்பாளிகளாக  நாம்  அனைவரும்  திகழ்வோமாக !



   

27 July 2011

ரமளான் மாதத்தின் சிறப்பு !

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், 


அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத்தை அடைவதற்கு முன் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும் , நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.  



அல்லாஹ் ரமளான் மாதத்தை சிறப்புமிக்க மாதமாக ஆக்கியிருக்கிறான் காரணம் நமக்கு நேர்வழி காட்டும் சங்கைமிக்க திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் மாதம் திகழ்கிறது.  

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)

ரமளான் மாதத்திற்கு சிறப்பாக அமைந்த திருக்குர்ஆனை அதிகமாக இந்த மாதத்தில் ஓதவேண்டும் குறிப்பாக அதன் பொருளோடு ஓதுவது சிறந்தது.


நோன்பு

ரமளான் மாதத்தின் மிகப் பெரும் பரிசாக அல்லாஹ் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறான்.நோன்பின் நன்மைகளை பற்றி நபி(ஸல்) அவர்கள் பல இடங்களில்  கூறி இருக்கிறார்கள்.

                   
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம் 1945)

 என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1894, 1904)


 சாதாரணமாக நோன்பிற்கு அதிக நன்மை இருந்தாலும் ரமாளான் மாதத்தின் நோன்பிற்கு வேறு எந்த வணக்கத்திற்கும் இல்லாத அளவு சிறப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.ரமளான் மாதத்தில் நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்து நோன்பு நோர்பவர்களுக்கு நாம் செய்த முன் பாவங்களை மண்ணிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.நோன்பு எனும் சிறிய அமலுக்காக இவ்வளவு பெரிய பரிசை,நன்மையை விட்டுவிடக் கூடாது.


யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 38, 1901, 2014)

இந்த ஹதீஸில் நாம் மேலும் கவனிக்க வேண்டியது ,நோன்பை நோற்கும் முன் அல்லாஹ் மேல் அதிக நம்பிக்கை கொண்டு இந்த செயலுக்காக அல்லாஹ் மிகப் பெரிய கூலியை நமக்கு வழங்க இருக்கிறான் என்று உறுதியாக நம்புபவருக்கே முன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.


லைலதுல் கத்ர்

இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)


இந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.

 பிரார்த்தனை 


நோன்பு நோர்கும்போது நம் பிரார்த்தனைகளை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நம்முடைய தேவைகளையும் ,செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் அதிகமாக இறைவனிடம் கேட்டு அழுது மன்றாட வேண்டும் ஏனெனில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப் படுவதில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறி இருக்கிறார்கள்.



 'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).

தர்மம்

ரமளான் மாதத்தில் நம்முடைய தர்மத்தை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் வாரி வழங்கியதை ஜிப்ரில்(அலை) அவர்களே சிறப்பித்து கூறி இருப்பதை புகாரியில் நாம் பார்க்க முடிகிறது.

நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி,வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமளான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

அனைத்து தரப்பு மக்களும் நல்ல விதத்தில் பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மத்தை கடமையாக்கி உள்ளது.ஒரு ஆளுக்கு 10 ரூபாயை மோதினாருக்கு கொடுத்து நம் கடமையை செய்து விட்டோம் என்று இல்லாமல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு அளவு அருசி(தானியம்) அல்லது அதற்குண்டான தொகையை கொடுக்க வேண்டும்.இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினானால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1503)


ஒழுக்கம்

ஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஒழுக்கத்தை பேணுவதை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஆயினும் இந்த ரமளான் மாதத்தில் கூடுதல் பேணுதலாக இருப்பது அவசியம்.கஷ்டப்பட்டு 30 நாட்கள் நோன்பு நோற்று இரவு நின்று வணங்கியும் எந்த பயனும் இல்லாமல் போய்விடக் கூடாது. தீய செயல் செய்யக் கூடியவர் பசியாக இருந்து நோன்பு நோற்பது எனக்கு தேவையில்லாதது என்று கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1903, 6057

பொய் சொல்வதை நாம் சிறிய பாவம் என்றே எண்ணி வருகிறோம் ஆனால் பொய் பேச்சு நோன்பை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு தீய செயலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.வியாபாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பெருக வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் ! தங்களுடைய நோன்பின் நன்மையை பாதுகாத்துக் கொள்ளட்டும்.நம் சமுதாயத்தில் அவதூறு பரப்புவதும் மிக சாதாரணமாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது குறிப்பாக பெண்கள் அவதூறு பரப்புவதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.இவர்களும் தங்கள் நாவை பாதுகாத்து நல்ல விஷயங்களை பேசி நன்மையை தேடிக் கொள்ளவேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் கூற வேண்டிய முக்கியமான ஒன்று தொலைகாட்சி.தொலைகாட்சியில் நல்ல விஷயங்களும் இருந்தாலும் கெட்ட விஷயங்களே அதிகமாக இருக்கிறது.ஷைத்தான் தன் வேலையை சுலபமாக செய்ய ஒரு கருவி.இஸ்லாமிய நிகழ்ச்சி,செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொலைகாட்சியை பயன்படுத்தி விட்டு ஆட்டம் பாட்டம் ,சினிமா போன்ற மார்க்கம் தடை செய்த நிகழ்ச்சிகளை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சி பக்கம் நெருங்க அனுமதிக்காதீர்கள்.

எனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! வர இருக்கும் ரமளான் மதத்தில் இருந்தாவது பொய் சொல்வதை விட்டும் ,அவதூறு பரப்புவதை விட்டும்,மார்க்க முரனான காரியங்களில் கலந்து கொள்வதை விட்டும் இன்னும் பிற தீய காரியங்களை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இது போன்ற தீய காரியங்களை தவிர்த்து விட்டு திருக் குர்ஆனை ஓதுதல்,தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை அதிககப்படுத்திக் கொள்ளுங்கள்.நாம் மேற் கூறிய காரியம் ரமளான் மாதத்திற்கு மட்டும் உள்ளது அல்ல மாறாக மற்ற அனைத்து மாதத்திற்கும் நாம் பேணுதலாக இருப்பதற்கு இது ஒரு பயிற்சி காலமாக இருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளவேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)

 நாம் இறைவனை அஞ்சுவதர்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளதாக நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.இறைவனை அதிகமாக அஞ்சி நற்காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு தீமையான காரியங்களில் இருந்து விலகி ,வர இருக்கும் ரமளான் மாதத்தை பயனுள்ளதாகவும் அதிக நன்மை பெற்றுத் தரக்கூடியதாகவும் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

                                                                                                                        நன்றி 
ஆசிரியர் : முஹமது ரஃபீக் அவர்கள் 
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்